சுற்றுலாவை அதிகப்படுத்தும் நோக்கில், நிலவை பூமிக்கு வரவழைக்க துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, நிலவைப் போன்ற அமைப்பில் ஒரு தங்கும் விடுதியை உருவாக்க உள்ளது. இது பார்ப்பதற்கு உண்மையான நிலவைப் போலவே தோற்றமளிக்கும் என்று கூறப்படுகிறது. மூன் வேர்ல்ட் ரிசார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிலவைப் போன்ற அமைப்பில் விடுதி கட்டப்பட உள்ளது. விடுதியைச் சுற்றி, கேளிக்கை விடுதிகள், ஸ்பா, உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் கட்டமைக்கப்பட உள்ளன. இதனால், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலவு காலனியில் சுமார் 300 குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன. அத்துடன், திரையரங்கங்களும் இடம்பெற உள்ளன. இதற்கான செயல் திட்டங்கள், வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 48 மாதங்களில், நிலவு காலனி முழுமையாகக் கட்டமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பாலைவன நிலமான துபாயில், பூர்ஜ் கலிபா போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி சுற்றுலா வளர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலவு விடுதி திட்டம் துபாயின் சுற்றுலாவை மேலும் வளர்க்கும் என்ற கருதப்படுகிறது.