பாகிஸ்தானில் கடுமையான வெப்பம் காரணமாக 568 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அங்கு சிந்து மாகாணத்தில் 50 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. எனவே மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவுரை கூறியுள்ளது. அதே சமயத்தில் அங்கு அடிக்கடி மின்வெட்டு நிகழ்கிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். வெயில் காரணமாக பலருக்கு காய்ச்சல், நீரிழப்பு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சிகிச்சை பலனின்றி 568 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசு வருவதாக கூறப்படுகிறது.