டிஜி யாத்ரா என்பது முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான பயோமெட்ரிக் முறையாகும். பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சரிபார்த்தலின் அவசியமின்றி நெரிசல் இன்றி பயணிகளுக்கு இது வசதியான முறையாக உள்ளது.
அனைத்து விமான நிலையங்களிலும் படிப்படியாக டிஜி யாத்ரா தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் 1.12.2022 அன்று ஜோதிர் ஆதித்ய சிந்தியாவால் இந்த தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் டிஜி யாத்ரா முறையைப் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.