கடந்த ஒரே வாரத்தில் டால்ஃபின்கள் உட்பட ஆயிரக்கணக்கான மீன்கள் பிரேசிலில் உயிரிழந்துள்ளன. இதற்கு அமேசான் மழைக் காடுகளில் நிலவி வரும் கடும் வறட்சி முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. அமேசான் காட்டில் உள்ள டெஃபே ஏரியை ஒட்டிய பகுதிகளில், 39 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை நீடித்து வருகிறது. இதன் விளைவாக, நூற்றுக்கும் மேற்பட்ட டால்பின்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மிமிராவா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வெப்பநிலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதால், டால்பின்களின் இறப்பு விகிதம் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெப்பநிலை உயர்வால், அமேசான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு, மனிதர்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக முழுமையான ஆய்வு மேற்கொள்ள, நிபுணர்கள் குழு ஒன்றை பிரேசில் அரசாங்கம் நியமித்து உள்ளது.