உலகில் உள்ள 56% கடல் நீர் தனது இயற்கை நிறத்தை விட்டு மாற்றம் அடைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘கடந்த 20 ஆண்டுகளில், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காரணங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் விளைவாக இது நேர்ந்துள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறமாற்றம் மனித கண்களுக்கு எளிதில் புலப்படுபவையாக இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, கடல் நீரின் நிறம் நீல நிறமாக இருக்கும். தற்போது, பூமத்திய ரேகையை ஒட்டி உள்ள பல இடங்களில், கடல் நீரின் நிறம் சற்று பச்சை நிறமாக மாறி உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, கடலில் காணப்படும் தாவரங்கள் அதிகரித்ததன் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, கடல் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான விரிவான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.