மாஸ்கோ - கோவா விமானத்தில் வெடிகுண்டு ஏதுமில்லை என சோதனைக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 236 பயணிகளுடன் கோவா நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து விமானம் குஜராத்தின் ஜாம்நகருக்கு திருப்பிவிடப்பட்டது. ஜாம்நகரில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் ஐஸோலேஷன் பே எனப்படும் தனிப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு விமானத்தில் தீவிர சோதனை செய்தது.
இதற்கிடையில் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ரஷ்ய தூதரகம் உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் இன்று காலை 10.30 மணியளவில் அந்த விமானம் பயணிகளுடன் கோவா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.