மாணவர்களிடம் வங்கி மற்றும் நிதித் துறைக்கு தேவையான திறன்களை வளர்க்க தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் - இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னையில் நேற்று இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக நிதித் துறைசெயலர் என்.முருகானந்தம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தணிக்கை துறை மிகப் பெரும் மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தணிக்கை துறையும் விரிவடைந்து வருகிறது. நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பது தமிழக அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது என்றார்.
தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தின் வங்கி, நிதி சேவைப் பிரிவின் இயக்குநர் சாய் சுமந்த் பேசுகையில், வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில் 10,000 தமிழக இளைஞர்களை பணிக்கு எடுக்க முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று கூறினார்.