ஜப்பானைச் சேர்ந்த பிரபல சுகாதார நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர், தமிழ்நாட்டில் 128 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இது, ஓம்ரான் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கு இந்த முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.