பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம் ஆர் எஃப், இந்திய பங்குச் சந்தையில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இதுவரை எந்த ஒரு பங்கும் 6 இலக்க மதிப்பை தொட்டதில்லை. தற்போது, முதல் முறையாக, 6 இலக்க பங்கு மதிப்பை எட்டிய நிறுவனமாக எம்ஆர்எப் உள்ளது. இன்று, மும்பை பங்குச் சந்தையில், எம்ஆர்எப் நிறுவனத்தின் பங்குகள் 1.37% உயர்ந்து, தனது ஒரு வருட உயர்வான பங்கு மதிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளில், எம்ஆர்எப் நிறுவனத்தின் பங்குகள் 100300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆயின. இதன் மூலம், ஒரு லட்ச ரூபாய் பங்கு மதிப்பை எம் ஆர் எஃப் நிறுவனம் தாண்டி உள்ளது.
முன்னதாக, கடந்த மே 8ம் தேதி, ஒரு லட்ச ரூபாய்க்கு 66.5 குறைவாக எம்ஆர்எப் பங்குகள் வர்த்தகமாயின. எனவே, விரைவில், 6 இலக்க பங்கு மதிப்பை எம்ஆர்எப் நிறுவனம் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அது நிகழ்ந்துள்ளது.