இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை 32-வது ஆண்டாக பகிர்ந்து கொண்டன.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ள கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி மையங்கள் இருக்கும் இடங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முதல்முறையாக கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன. தற்போது 32-வது ஆண்டாக அணுசக்தி மையங்களின் பட்டியல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.