மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை குறிவைத்து அந்நாட்டின் ஜனநாயக ஆதரவு குழுவினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபிடாவில் உள்ள மியான்மர் ராணுவ நிலைகள் மீது ஜனநாயக ஆதரவு குழுவினர் ட்ரோன் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இதில் ராணுவ தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ராணுவம் அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து விட்டதாக கூறியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சூகியின் அரசை கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் கலைத்தது. பின்னர் சூகி மற்றும் அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. அதை ராணுவம் அடக்குமுறையை கையாண்டு ஒடுக்கியது. இந்த சூழலில் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுத போராட்டம் தொடங்கியது. மியான்மர் அரசுக்கு எதிராக எல்லை பகுதி மாகாணங்களில் பழங்குடி ஆயுத குழுவினர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில் தலைநகர் நேபிடாவில் ஜனநாயக ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.