கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மியான்மர் நாட்டின் கச்சின் பகுதியில், கச்சின் சுதந்திர அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, மியான்மர் நாட்டை ஆளும் ராணுவத்தினர், வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இசை கலைஞர்கள், பாடகர்கள் உள்ளிட்ட 60 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீட்பு படையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மர் நாடு, பல்வேறு சிறுபான்மையினரின் கூட்டங்களாக பிரிந்து உள்ளது. முன்னதாக, ஆங் சான் சூகியின் தலைமையின் கீழ், ஒற்றை நாடாக உருவெடுத்த மியான்மரில், கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அதன் பின்னர், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்ற வான்வழி தாக்குதலும் அரசை எதிர்த்த சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்று கூறப்படுகிறது.
ஒரே வான்வழி தாக்குதலில் அதிகம் பேர் உயிரிழப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், நூறுக்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக கச்சின் பகுதி சிறுபான்மையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளன. ஆனால், ஆளும் இராணுவத்திடம் இருந்து இது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தென்கிழக்கு ஆசியாவின் வெளியுறவு அமைச்சர்கள் விரைவில் இந்தோனேஷியாவில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். மியான்மர் நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அதில் பேசப்பட இருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்பிற்கு மூன்று நாட்கள் முன்னர், ராணுவம் அப்பாவி மக்கள் மீது இத்தகைய பெரும் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.