மியான்மரில் உள்ள ராகைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து உள்நாட்டு அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் ஆயுதமேந்திய பூர்வ குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ராகைன் மாநிலத்திற்கு இந்தியர்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது, ராகைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால் அங்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும். அதோடு அங்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இந்தியர்கள் ராகைன் மாநிலத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமின்றி தற்போது அங்கு உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வன்முறை வெடித்ததால் கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியுறவுத்துறை கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.