மைசூருவின் 412-வது தசரா விழாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மைசூரு வந்த அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின் அங்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி அம்பாரியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவி தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார்.
அவருடன் கவர்னர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகளான பிரகலாத் சோஷி, சோபா கரண் ராஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இத்திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 10வது நாள் விஜயதசமி அன்று உலக பிரசித்தி பெற்ற யானைகள் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூரு அரண்மனையில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்திற்கு பிறகு தசரா திருவிழா முடிவடையும்.