ஒவ்வொரு நாளும், சூரியன் மறைவுக்குப் பிறகு இமயமலையின் வெப்பநிலை வெகுவாக குறைந்துவிடும். அப்போது, எவரெஸ்ட் சிகரப் பகுதிகளில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்கும். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிவியல் விளக்கம் ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
பனிப்பாறை நிபுணர் எவ்ஜெனி பொடோல்ஸ்கி தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் குழு, இரவு நேரத்தில் வெப்பநிலை குறைந்ததும் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பனிப்பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி, உடைந்து, இந்த விசித்திர சத்தம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். பல வாரங்களாக எவரெஸ்ட் பகுதியில் அவர்கள் தங்கி இருந்து பனிப்பாறைகளில் நடக்கும் மாற்றங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து, இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரத்தில், எவரெஸ்ட் சிகரத்தில் மிகப்பெரிய பனிப்பாறைகள் திடீரென வெடிப்பதும், விரிசல் விடுவதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பனிப்பாறைகளுக்குள் நுண்ணுணர்வு கருவிகளை பொருத்தியும், நிலநடுக்கத்தை பதிவு செய்ய உதவும் கருவிகளை பயன்படுத்தியும் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.