நா. வானமாமலை

முதன்முதலில் தமிழக வரலாறு அரசர்களின் மெய்க்கீர்த்தி ...

முதன்முதலில் தமிழக வரலாறு அரசர்களின் மெய்க்கீர்த்தி மற்றும் கதைகள் மூலமாக எழுதப்பட்டது. பின்னர், கதைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டி, மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் பண்பாட்டோடு சேர்த்து வரலாறு இயற்றப்பட்டது. ஆனால், வரலாற்றின் பக்கங்கள் இதோடு நிற்கவில்லை என்றும் நாட்டார் வழக்காற்றியலையும் வரலாற்றோடு இணைத்து எழுதும் பொழுதே ஒரு சமூகத்தின் பல ஆண்டுகால வரலாறு முழுமைப் பெற முடியும் என்றும் முதன் முதலில் எடுத்துரைத்தவர் பேராசிரியர். நா. வானமாமலை அவர்கள். அதோடு, எவராலும் பதிவுசெய்யப்படாத வெகு மக்கள் பண்பாட்டை, தனது புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் மூலமாக முதன்முதலில் பிரதிநிதித்துவப்படுத்தி, தமிழின் இன்றைய ஆய்வாளர்கள் பலருக்கும் வழிகாட்டியாக நா. வானமாமலை விளங்குகின்றார். அவரைப் பற்றிய சில தகவல்கள்:

பொதுவுடைமை சிந்தனையாளர்:

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், 7.12.1907-ல் பிறந்த நா.வானமாமலை, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுகப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பையும், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டமும் பெற்றவராவார். இளம் வயதிலேயே தமிழ் இலக்கியங்களையும், மேலை இலக்கியங்களையும் வாசித்த அனுபவம் கொண்டவரான நா.வா., இயல்பிலேயே மனிதநேய உணர்வைப் பெற்றிருந்ததனால், இளமைக் காலத்திலேயே நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார். மேலும், பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நா.வா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார். 1942 தொடங்கி சில வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்த அவர் சமூகப் பணிகளுக்காகத் தனது பணியைத் துறந்தார். அக்காலகட்டத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்கள் ஏராளமாக இருந்ததும், அவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே பெரிதும் துணைநிற்பதும் அறிந்த அவர், 1948-ல் பாளையங்கோட்டையில் தனிப்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார். மேலும், கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் முன்னின்று 1948 மற்றும் 1970ம் வருடங்களில் கைது செய்யப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைக் கருத்துகளை அனைவரிடத்திலும் விதைத்துக் கொண்டே இருந்தார்.

‘நாட்டார் வழக்காற்றியல்’ அறிஞர்:

நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்ற எதுவுமே முறையாக அறிமுகமாகாத, கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் நா. வானமாமலை அவர்கள் இந்தத் துறையில் செயல்பட்டார். இன்றைய சூழலில் வழக்கில் இருக்கும் ‘நாட்டுப்புறவியல்’ மற்றும் ‘நாட்டார் வழக்காற்றியல்’ போன்ற கலைச் சொற்கள் இவரது காலத்தில் உருவானவையே ஆகும். சாதாரண மக்களின் பண்பாட்டைப் பதிவுசெய்யும் நாட்டார் இயலை ஒரு கல்விசார் படிப்பாக மாற்றியதில் நா. வானமாமலையின் பங்கு முக்கியமானது.

நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து, அவற்றைப் பொருண்மை, நிலவியல், சூழல் அடிப்படையில் நா.வா. வகை தொகைப்படுத்தினார். ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ (1964) ஆகிய இரு தொகுப்புகளில் நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு, பாடியவர்கள், பாடல் வழங்கிய இடங்கள், அவை சார்ந்த நிலம், சூழல், மெய்ப்பொருள், பாடல்களைச் சேகரித்தோர் போன்ற தகவல்களைத் தொகுத்து வெளியிட்டார். மேலும், கதைப் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, பல நூல்களை இயற்றியுள்ளார். தொ.பெ. மீனாட்சிசுந்தரம் துணைவேந்தராக இருந்தபோது, நா.வா.வின் நாட்டுப்புற நூல்களான கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு நூல்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டன. மேலும், 1975-ல் தார்வார், திராவிட மொழியியல் பல்கலைக்கழகத்தில் இவர் ஆய்வுத் தகைமையாளராக இருந்த போது இயற்றிய 'இன்டர்பிரட்டேஷன்ஸ் ஆஃப் தமிழ் ஃபோக் க்ரியேஷன்ஸ்' எனும் ஆய்வு நூலும் இன்னும் பல கட்டுரைகளும் நாட்டாரியல் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இன்றும் திகழ்கின்றன.

பேராசிரியர்:

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உபவிளைவாக 'அனைத்தும் ஆங்கிலம்' என மாறிய சூழலில், 'தமிழில் முடியும்' என்னும் தொகுப்பு நூல் ஒன்றை நா.வா. வெளிக்கொணர்ந்தார். மேலும், அடிப்படையான விஞ்ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சிறுவர்களுக்கென 'காகிதத்தின் கதை', 'இரும்பின் கதை', 'ரப்பரின் கதை' முதலிய அறிவியல் நூல்களை எழுதினார். மேலும், 'விண்வெளி ரசாயனம்', 'விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும்' போன்ற இவரின் நூல்கள் தமிழ் மொழியில் அறிவியல் நூல்களுக்கான முன்னோடியாகத் திகழ்கின்றன.

1967-ல் 'நெல்லை ஆய்வுக் குழு' என்னும் அமைப்பை உருவாக்கி, எல்லோருக்கும் ஆய்வுகள் மூலம் கற்றுக் கொள்ளும் மற்றும் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். பல துறைகள் சார்ந்து கட்டுரைகள் எழுதப்படுவதும், புதிய அறிவுத் துறை வரவுகள் குறித்த அறிமுகமும் இக்கூட்டங்களில் நடந்தேறின. ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969-ல் 'ஆராய்ச்சி' என்னும் ஆய்விதழைத் தொடங்கினார். பல்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன் ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன. பொருளாதார நெருக்கடியிலும் தான் இறக்கும் வரை அதனை நடத்தினார். அவரது மறைவிற்குப் பின்னரே சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த ஆய்விதழ்கள் பல தமிழில் வெளிவரத் தொடங்கின. இவ்வாறு, எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றாத இவரே தமிழில் ஆய்விதழ்களுக்கான முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார். எனவே தான், தொழில் முறைப் பேராசிரியராக இல்லாத போதும் "பேராசிரியர்" என்ற பெயரால் நா. வானமாமலை கொண்டாடப்படுகிறார்.

இவ்வாறு, மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலிருந்து வரலாற்றை அணுக வேண்டுமென்று உணர்த்திய பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தன் 73ஆம் வயதில் 1980ஆம் ஆண்டு காலமானார். ஆனால், இவரது 22 நூல்கள் 2008-09ல் நாட்டுடைமையாக்கப்பட்டன. எனவே, பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தனது எழுத்துக்கள் மூலம் என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu