ஆப்பிரிக்காவை சேர்ந்த நமீபியா நாட்டின் அதிபர் ஹாகே கெயின்கோப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாகே கெயின்கோப், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நமீபியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய இருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 8ஆம் தேதி அமெரிக்கா சென்ற அவர், ஜனவரி 31 அன்று நமீபியா திரும்பினார். ஆனால், அவருக்கு நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 82. நமீபியா நாடு கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது முதல் ஹாகே கெயின்கோப் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார். முதலில் பிரதமர் ஆகவும், அதன் பின்னர் அமைச்சரவையிலும் அங்கம் வகித்த அவர், இறுதியில் அதிபர் பதவியில் இருந்த போது இறந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.