பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் பாரத் மார்ட் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அமீரக பகுதிகளில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்த நிறுவனங்களுக்கான சேமிப்பு கிடங்கு வசதிகளை அமைத்து தர பாரத் மார்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேமிப்புக் கிடங்குகள் தவிர சில்லறை வணிக விற்பனையகங்கள் மற்றும் அலுவலகங்களும் பாரத் மார்ட்டில் செயல்படும். இந்திய ஏற்றுமதியாளர்கள் அனைவருக்குமான ஒற்றை தளமாக பாரத் மார்ட் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அனைத்து வித பொருட்களும் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பாரத் மார்ட் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் செயல்பாடுகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.