வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, பூமிக்கு மிகவும் நெருக்கமாக 1000 அடி விண்கல் ஒன்று வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
2022 TN 1 என்று அழைக்கப்படும் விண்கல் பூமியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. மணிக்கு 63828 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 1029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், 7130461 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தூரமானது, பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 19 மடங்கை விட குறைவாகும். எனினும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என நாசா உறுதியளித்துள்ளது. பொதுவாக, செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் உள்ள விண்கற்கள் பூமியை நோக்கி வரும். ஆனால் 2022 TN 1 விண்கல், ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையை கொண்டிருக்காமல் விண்வெளியில் சுற்றி திரியும் விண்கல் ஆகும். இத்தகைய விண்கல் ஒருவேளை பூமியில் மோதினால் அதி பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, விண்கல்லின் செயல்பாடுகளை நாசா விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.