நாசாவின் சேலஞ்சர் விண்கலம், ஏழு விண்வெளி வீரர்களை தாங்கிக்கொண்டு, 37 வருடங்களுக்கு முன்னர் பயணத்தை தொடங்கியது. செயற்கைக்கோள் ஒன்றை நிறுவுவதற்கும், ஹாலி வால் நட்சத்திரம் குறித்த ஆய்வுக்காகவும் சேலஞ்சர் விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியது. இந்நிலையில், அதன் உடைந்த பாகம் ஒன்று ஃப்ளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், “கடந்த 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இந்த துயர சம்பவம் நேர்ந்தது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், அது ஏவப்பட்டது. இதனால், அதில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பிறகு, நாசாவில், ‘விண்வெளி பயணத்திற்கான பாதுகாப்பு’ முதன்மையாக கருதப்பட்டு வருகிறது” என்று கூறினார்.