அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் DARPA அமைப்பு மற்றும் நாசா ஆகியவை இணைந்து, புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளன. அதன்படி, 2027 ஆம் ஆண்டில், அணு ஆற்றல் மூலம் இயங்கும் ராக்கெட் என்ஜின் வடிவமைக்கப்பட்டு, ராக்கெட் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ராக்கெட் தொழில்நுட்பம் மூலம், குறைந்த நேரத்தில் விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று திரும்ப முடியும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டே, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
அணு ஆற்றல் மூலம் இயங்கும் ராக்கெட் எஞ்சின், ராக்கெட்டின் மொத்த எடையில், குறைந்த அளவிலான எடையையே ஆக்கிரமிக்கும். அதனால், கூடுதல் எடையுள்ள பிற பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என நாசாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு பிளவு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்படும் வெப்பத்தால் ராக்கெட் என்ஜினை செயல்படுத்துமாறு இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சாதாரண ராக்கெட் என்ஜின் திறனைவிட 3 மடங்குக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.