நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் 1 திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. முதல் கட்டமாக, ஆளில்லா விண்கலம் ஒன்றை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை போன்ற காரணங்களால், தொடர்ந்து 5 வாரங்களாக இந்தத் திட்டம் தடைபட்டு வந்தது. இந்நிலையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி, ஆர்டெமிஸ் 1 விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
முதல் முறை, எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது. அதன் பின்னர், இயன் சூறாவளி காரணமாக ராக்கெட் ஏவுதல் மேலும் தள்ளிப்போனது. ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் நிலவில் செலுத்தப்படவுள்ளது. மேலும், 69 நிமிட கவுண்ட் டவுன்களில் இந்த ராக்கெட் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12:07 மணியளவில் கவுண்ட் டவுன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 4ம் தேதியே, ராக்கெட் ஏவு தளத்திற்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ விண்கலத்திற்குப் பிறகு, மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும் இரண்டாம் திட்டம் இதுவாகும். அதனால், கிரேக்க புராணங்களில் ‘அப்போலோ’வின் சகோதரியாக கருதப்படும் ஆர்டெமிஸ் பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வரும் 2025 ஆம் ஆண்டு, இந்த திட்டம் மூலம், மனிதர்கள் நிலவில் கால் பதிப்பர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்வுக்கு மேலும் காலதாமதம் ஆகும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.