நாசா, சூரியனைச் சுற்றி வரும் ட்ரோஜன் விண்கற்களை ஆய்வு செய்வதற்காக, ‘லூசி’ என்று விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம், பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதனை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் உலகளவில் கவனம் ஈர்த்து வருகின்றன.
பூமியிலிருந்து சுமார் 380000 மைல்கள் தொலைவில் இருந்து, லூசி விண்கலம் பூமியின் தோற்றத்தை படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படத்தில், எத்தியோப்பியா பகுதி தெளிவாக படமாகியுள்ளது. இங்கிருந்து 3.2 மில்லியன் வருடங்கள் பழமையான மூதாதையர் படிமங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த புகைப்படம் கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
வியாழன் கோளுக்கு அருகில், லட்சக்கணக்கான விண்கற்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்களை ஆராய்ந்து, சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்த தகவல்களை அறிய நாசா திட்டமிட்டது. அதன்படி, லூசி விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம், விண்கற்களை நோக்கிச் செல்லும் பாதையில், மூன்று முறை பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சமயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இவை, விண்கலம் அதிவேகமாக செல்லும் பொழுது விண்கற்களை படம் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புகைப்படம் மட்டுமல்லாது, பூமி மற்றும் நிலவு ஆகியவற்றை இணைத்து எடுத்த, ஒரு புகைப்படத்தை லூசி விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படம் மூலம், பூமி மற்றும் நிலவுக்கு இடையிலான தூரம் துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமி மற்றும் நிலவு சேர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லூசி விண்கலம் 12 ஆண்டுகள் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 விண்கற்களை அருகில் சென்று தாண்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பும் புகைப்படங்களின் அடிப்படையில், சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகளை நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.