அமெரிக்காவில், செவ்வாய் கிரகத்தை போன்ற வாழிடம் ஒன்றை நாசா உருவாக்கி உள்ளது. இதில் விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வலர்களை ஓராண்டு காலம் தங்க வைத்து, ஆராய்ச்சி செய்ய உள்ளது. அதன்படி, தற்போது, 4 தன்னார்வலர்கள் செவ்வாய் கிரக வாழிடத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தனிமை உள்ளிட்ட உளவியல் ரீதியிலான மாற்றங்கள் ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.
இந்த செவ்வாய் கிரக வாழிடம் டெக்சாஸ் மாகாணத்தில் வெறும் 1700 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஓராண்டு காலம் தங்க உள்ள நபர்கள், விண்வெளி நடைபயண பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். அத்துடன், அங்கு உணவுக்காக பயிர்களை வளர்க்கும் பணியிலும் ஈடுபடுவர். இந்த ஒரு வருட ஆராய்ச்சியில் அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை சார்ந்த மாற்றங்கள் கண்காணிக்கப்படும். இதற்கான தன்னார்வலர்களை நாசா தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், தன்னெழுச்சியோடு செயல்படுபவர்கள் ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.