செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, பெர்சீவரன்ஸ் ரோவர் என்ற கலத்தை நாசா அனுப்பி உள்ளது. 'பெர்சி' என்று செல்லமாக அழைக்கப்படும் இது, செவ்வாய் கிரகத்தில் சாம்பிள் டிப்போ அமைக்கும் தனது முதல் பணியை நிறைவு செய்துள்ளது. தனது 10வது மற்றும் இறுதி சாம்பிள் டியூப்பை செவ்வாய் கிரகத்தில் பெர்சி விடுத்துள்ளது. இந்த ட்யூப், செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் திட்டத்தில், பூமிக்கு மீண்டும் திரும்ப உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, பெர்சி தனது முதல் மாதிரியை செவ்வாய் கிரகத்தில் விடுத்தது. அதிலிருந்து 6 வார காலத்திற்குள் 10 மாதிரி ட்யூபுகளையும் பெர்சி விடுத்துள்ளது. டைட்டானியம் தாதுவால் ஆன இந்த ட்யூப், ஜிக் ஜாக் அமைப்பில், 5 முதல் 15 மீட்டர் தொலைவில் ஒன்றிலிருந்து மற்றொன்று அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் தூசி புயல் காரணமாக இவை மூடப்பட்டாலும், அதனை கண்டறிய முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ட்யூபுகளில் செவ்வாய் கிரக பாறைகளின் மாதிரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.