நாசா, நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆர்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில், ஆர்டெமிஸ் 1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதில், ஆளில்லா விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது, வரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு, மனிதர்களை சுமந்து செல்லும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தை செயல்படுத்த நாசா முடிவெடுத்துள்ளது.
ஆர்டெமிஸ் 2 திட்டத்தின்படி, 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் விண்கலம், நிலவை சுற்றி வந்து பூமியை அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள 4 பேர் குறித்த அறிவிப்பு இவ்வருட இறுதியில் வெளியாகும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஆர்டெமிஸ் 2 திட்டம் நிறைவடைந்த பின்னர், ஒரு வருடம் கழித்து, ஆர்டெமிஸ் 3 திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அதில் மனிதர்கள் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.