அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை, வரும் 2027 ஆம் ஆண்டு மே மாதம் விண்வெளியில் நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விண்வெளி தொலைநோக்கி மூலம், பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த பல தகவல்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது காலக்கண்ணாடியை பின்னோக்கி எடுத்துச் செல்லும் என்று ஆர்வமுடன் தெரிவித்துள்ளனர்.
ரோமன் விண்வெளி தொலைநோக்கி, அகண்ட பிரபஞ்சத்தை சிறிய புகைப்படத்தில் அடக்கும் அளவிற்கு அதிக திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது, முழு நிலவைப் போல 10 மடங்கு பெரிய பகுதியை, ஒற்றைப் புகைப்படத்தில் அடக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அத்துடன், ஹப்பிள் தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆகியவற்றுடன் இணைந்து, ரோமன் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.