மனிதனால் விண்வெளியில் நெடுந்தூரத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் வாயேஜர் 2 இரண்டாவது முக்கியமானதாகும். கடந்த 1977 ஆம் ஆண்டு இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது வாயேஜர் 1 விண்கலத்துடன் இணைந்து விண்வெளி பயணம் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில், பூமியிலிருந்து 12.3 பில்லியன் மைல் தொலைவுக்கு அப்பால் விண்கலம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்துடனான தொடர்பை நாசா இழந்திருந்தது. தற்போது, இணைப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக நாசா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் தேதி, அடுக்கடுக்கான தவறான கட்டளைகளால் வாயேஜர் 2 விண்கலத்தின் ஆண்டனா, பூமியை நோக்கிய திசையில் இருந்து 2 டிகிரி மாறுபாடாக அமைந்தது. இதனால், பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையில் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. பூமியிலிருந்து அனுப்பப்படும் கட்டளைகள் விண்கலத்தை சென்றடையவில்லை. அதே நேரம், விண்கலத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் பூமியை வந்தடையவில்லை. வரும் அக்டோபர் 15ஆம் தேதி, விண்கலத்தின் அடுத்த ஆண்டனா திசை மாற்றம் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, அன்றைய தினம், விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக, விண்கலத்துடனான இணைப்பு மீண்டும் கிடைத்துள்ளதாகவும், விண்கலம் நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.