அடுத்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சார்ஜா, துபாய், அஜ்மானில் சாலைகள் மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. துபாய் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலைய ஓடு பாதையில் மழை வெள்ளம் புரண்டோடியது.
இந்நிலையில், நேற்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும். அடுத்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் பரவலாக மழை காணப்படும். 23ஆம் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைக்குப் பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும். இந்த நாட்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.