இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர், 11 மில்லியன் கிலோ தேயிலை இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு, இது 6.7 மில்லியன் கிலோவாக குறைந்தது. ஆனால், அதே வேளையில், தேயிலைக்கான தேவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரிக்கவில்லை. இதனால், அங்கு வேலை செய்யும் சுமார் 55000 ஊழியர்களுக்கு முறையாக ஆதரவு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால், தேயிலை தோட்ட முதலாளிகள், தங்களது எஸ்டேட்டுகளை விற்க ஆர்வம் காட்டி வருவதாக டார்ஜிலிங் டீ அசோசியேஷன் அமைப்பின் தலைமை ஆலோசகர் சந்தீப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவை டார்ஜிலிங் தேயிலையை பெருமளவு இறக்குமதி செய்து வந்தன. தற்போது, ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக டார்ஜிலிங் தேயிலையை இறக்குமதி செய்ய ஐரோப்பியர்கள் முன் வரவில்லை. முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, டார்ஜிலிங் மலைப்பகுதியில் நடந்த சில சம்பவங்களால், அங்கு 4 மாத காலத்திற்கு எஸ்டேட் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அப்போதிலிருந்து, ஜப்பான் நாடு, டார்ஜிலிங் தேயிலை இறக்குமதியை நிறுத்திக் கொண்டது. நிலைமை சரியான பின்னரும் தேயிலை வாங்குவதற்கு ஜப்பான் முன் வரவில்லை.
அத்துடன், தேயிலை ஸ்டேட்களின் 15 சதவீத பகுதியில், விடுதிகள் அமைத்து தேயிலை சுற்றுலாவை பெருக்க, மேற்கு வங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அங்குள்ள ரியல் எஸ்டேட் தரகர்கள் தேயிலைத் தோட்டங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய எஸ்டேட் முதலாளி ஒருவர், “பெரிய அளவிலான தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் நிலத்தை விற்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது. ஆனால், வருமானம் குறைந்துள்ள, ஒன்று இரண்டு எஸ்டேட்டுகள் வைத்திருப்பவர்கள் நிலத்தை விற்க முனைப்பு காட்டி வருகின்றனர்” என்று கூறினார்.
இது குறித்து பேசிய இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா, “டார்ஜிலிங் தேயிலை தொழில் கடந்த சில காலமாகவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தற்போதைய நிலையில், 40 முதல் 50 சதவீத எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களது நிலத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளனர். உரிய விலை கிடைத்தால் விற்பனை அதிகரிக்கும்” என்று கூறினார்.