மக்களவையில் நீட் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று மக்களவையில் அவை கூடியதும் விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது