பண்டையக் காலத்தில் இருந்து தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் காய்/கனியாக நெல்லிக்காய் விளங்குகிறது. அதற்குச் சான்றாக இன்று தமிழில் உள்ள பழமொழிகளில் நெல்லிக்கனி அதிகமாகக் குறிக்கப்படுகிறது. உதாரணமாக “மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும்” என்ற பழமொழியையும் “உள்ளங்கை நெல்லிக்கனி போல” என்ற சொல்லாடலையும் நம் வாழ்வில் ஒருமுறையாவது கடந்து வந்திருப்போம். மேலும், நெல்லியின் மருத்துவக் குணங்களை எடுத்துரைப்பது போல அமைந்த “நெல்லியால் நெடும்பகை போகும்” என்ற பழமொழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு நெடும்பகை என்பது நாள்பட்ட உடல் நோயைக் குறிக்கும். இவ்வாறு நெல்லிக்கனி என்பது நமது நல்வாழ்விற்கான கனி என்பது எடுத்துரைக்கப்படுகிறது.
சமைத்தாலும், வேக வைத்தாலும், காயவைத்தாலும், வெட்டி நறுக்கினாலும் தன்னிடத்தில் உள்ள மொத்தப் பயனையும் வீணாக்காமல் தரும் கனி இந்த நெல்லிக்கனியாகும். இது நமது நாட்டிற்கே உரியத் தாவரமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சங்க பல பாடல்களில் நெல்லி குறிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக,
“நெல்லி அம்புளி மாந்தி” என குறுந்தொகையும்,
“புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றனர்” என அகநானூறும்,
“சுவைக்காய் நெல்லி” என்று நற்றிணையும்,
“கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி”
என சிறுபாணாற்றுப்படையும்
“சிறியிலை நெல்லித் தீங்கனி” எனப் புறநானூறும்
கூறுகின்றன. இதன் மூலம் நெல்லி என்பது தமிழர் உணவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது அறியப்படுகிறது. மேலும், வேறெந்த கனிக்கோ காய்க்கோ இல்லாத வகையில் நெல்லிக்கனிக்கு மட்டும் தமிழில் தனி வரலாறு கூறப்படுகிறது. தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணி, தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை அதியமான் என்ற மன்னன் தமிழ்ப்புலவர் ஔவைக்குக் கொடுத்ததே அந்த வரலாறு.
அந்த நிகழ்வை ஒளவையார்
"வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே"
என்று புறநானூற்றில் பதிவிட்டுள்ளார். ஒளவையார், அதியமானை நோக்கி "சிவன் பாற்கடலில் விளைந்த நஞ்சைத் தானே உண்டு அமுதத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்ததைப் போல உயிரைப் பணயம் வைத்துப் பறித்து வந்த அரிய நெல்லிக்கனியை என்னிடம் கொடுத்த நீயும் அந்த சிவனைப்போல நீடூழி வாழ்க" என்று வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதே நிகழ்வை மற்ற புலவர்களும் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். அவையாவன:
“மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி அவ்வைக்கீந்த
... ... அதிகனும்.”
எனச் சிறுபாணாற்றுப்படையும்;
“சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத்
தமிழ் சொல் ஒளவைக்கு
ஆதரவோடு கொடுத்த”
என கொங்கு மண்டலச் சதகமும்
“நெல்லிக்கனி அமுதை ஒளவைக்களித்து வேலதிகன்
மல்கு புகழ் கொண்டான் வடமலையே.”
என வடமலை வெண்பா எனும் நூலும் குறிப்பிடுகின்றன. இவை மூலம் நெல்லிக்கனி என்பது மரணத்தைத் தடுக்கும் அரிய ஆற்றல் கொண்ட கனி என்பது ஆணித்தரமாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதை அறியலாம்.
இத்தகையச் சிறப்பு வாய்ந்த நெல்லிக்காயின் மருத்துவ பயன்களைப் பற்றி சித்தர்களும் கூறியுள்ளனர். என்றும் இளமையுடன் தோற்றமளிக்க நெல்லிக்காய் உதவும் என்பதை தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய ‘தேரன் கண்ட உண்மை’ என்னும் நூலில் விளக்கியுள்ளார்.
“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்”
என்ற பாடல் ஆமலகம் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயை உண்டு வந்தால் முதுமையை வெல்லலாம் என்று கூறுகிறது. சித்த மருத்துவம் மட்டுமின்றி யுனானி மற்றும் ஆயுர்வேதத்திலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. ஆயுர்வேதத்தில், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தப்படும் சியவனப்ராஷிலும் நெல்லிக்காய் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறது. இதன் மருத்துவக் குணங்களை இந்தியர்களிடமிருந்து கற்று வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்தியவர் ‘இந்தியவியல் படிப்பின் தந்தை’ என்று அறியப்படும் ஆல்பிருனி என்பவர் ஆவார். அவர், கி.பி.1017 முதல் 13 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களையும் சரித்திர நிகழ்வுகளையும் ஆராய்ந்து “இந்தியாவின் சரித்திரம்” என்ற புத்தகம் எழுதியுள்ளர். மேலும், அவர் தனது மருத்துவப் புத்தகத்தில், நெல்லிக்கனியின் மகிமையை இந்தியர்களிடமிருந்து கற்று எழுதியுள்ளார். இதன் மூலமாகவே, அராபியர்களுக்கு இந்தக் கனி அறிமுகமாகி, யுனானி மருத்துவத்திலும் இன்று நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சிறிய கனியில் நூற்றுக்கு மேற்பட்ட பலன்கள் கிடைப்பது தான் நெல்லிக்கனியின் சிறப்பாகும். பிலன்தஸ் எம்பிலிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட நெல்லி, யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த உயரமான இலையுதிர் மரமாகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலும் காணப்படும். கரு நெல்லி – அரு நெல்லி என நெல்லியில் இருவகைகள் உண்டு. இரண்டுமே நற்பயன்களை அள்ளித் தருவதாக உள்ளன. மேலும், நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்கிறோம். இதனை எவ்வகையில் உபயோகப்படுத்தினாலும் பயன் தரும். அதையே,
“பித்த மனலையம் பீநசம்வாய் நீர்வாந்தி
மத்தமலக் கட்டு மயக்கமுமி-லொத்தவுரு
வில்லிக்கா யம்மருங்கா மென்குட்கா லக்தேர்ந்தே”
என்ற பாடல் வரிகள் கூறுகின்றன. தலைச்சுற்றல், மந்தம், வாயில் உமிழ்நீர் சுரக்காமல் இருத்தல் குறைபாடு, பிறக மேகம், பைத்தியம், கப நோய் போன்றவை நெல்லிக்காய் உண்பதால் தீரும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்தாகும்.
நெல்லி மரத்தின் பட்டை, வேர், இலை, பூ அனைத்துமே மருந்து பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனுடன் சேர்த்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரம், கரோடின் பாலிபினால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவையும் நிறைந்திருக்கிறது. நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. சித்தர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு சுவையும் உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கு அவசியமாகிறது. எனவே, மூன்று சுவைகளை ஒருங்கே கொண்ட நெல்லிக்கனி, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையுமே சமன்படுத்தக்கூடிய வல்லமை பெற்றதாகும். இதனாலேயே, நெல்லியால் பயனடையாத உடலுறுப்பு இல்லை என்று கூறும் அளவிற்கு, மிகுந்த பலன்களை நெல்லி வழங்குகிறது. அதன் சிறப்பு பயன்களில் சில:
- நெல்லியின் காய் மற்றும் கனி ஆகியன கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி போன்றவற்றைக் குணமாக்கும். மேலும், பற்களுக்கும் ஈறுகளுக்கும் வலுவைத் தரும்.
- நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும்; வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
- நெல்லிமுள்ளி என்று அழைக்கப்படும் நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும்.
- நெல்லி மரத்தின் பட்டை நஞ்சை நீக்கும் தன்மைக் கொண்டது. எனவே தான், இன்றும் கூட, கிராமங்களில் கிணற்று நீரை தூய்மை செய்ய அதனுள் நெல்லிக்கட்டையைப் போடுவது வழக்கமாக உள்ளது.
இத்தனை சிறப்புகள் உள்ள நெல்லிக்காய் நமக்கு எளிதில் கிடைக்கும் காரணத்தாலேயே இதன் அருமையை நாம் உணர மறக்கிறோம். இனியாவது, இதன் சிறப்புகளை உணர்ந்து செயல்பட்டு உடல் ஆரோக்கியம் பெறுவோம்.