சீனாவுடன் இணைந்து, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் கீழ், நேபாளத்தில் பொக்காரா சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வந்தது. தற்போது, இந்த விமான நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. புஷ்ப கமல் தகல் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், நேபாள நாட்டின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பீஷ்ணு பவதேல் பங்கு பெற்றார்.
சீனாவின் கடன் உதவி பெற்று இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. இதற்காக, கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டு, 215.96 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் மட்டுமல்லாது, ரயில்வே இணைப்புகள் அமைக்கும் பணியிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்த விமான நிலையம் நேபாள நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நேபாள நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.