நேபாளத்தில், பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ராஷ்ட்ரிய பிரஜதந்திர கட்சி (ஆர்பிபி) திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில், வரும் மார்ச் 9ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் பிரசண்டா, அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஆர்பிபி கட்சி, ஆளும் கூட்டணியில் தனது ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பிரதமர் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் சிபிஎன் கட்சி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் நேபாள காங்கிரஸின் மூத்த தலைவர் ராம் சந்திரா பௌடேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்பிபி கட்சியின் தலைவரும், நேபாளத்தின் துணைப் பிரதமருமான ராஜேந்திர லிங்க்டன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சனிக்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில், கூட்டணியில் இருந்து விலக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில், மொத்தம் 7 கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்பிபி கட்சி 5வது பெரிய கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.