ரபா நகருக்குள் தரைவழி தாக்குதல் நடத்த தேதி முடிவாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.
போரால் புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் புகலிடமாக ரபா திகழ்கிறது. இங்கு தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரபாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான தேதி முடிவாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒடுக்க ரபா நகர் மீது படையெடுப்பது மிகவும் அவசியமாகும். அங்கு தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்வது உறுதி. அதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது என்றார். எனினும் அவர் எந்த தேதி என்ற விவரத்தை கூறவில்லை. இதற்கிடையே அங்குள்ள மக்களை வெளியேற்றி தங்க வைக்க 40,000 கூடாரங்களை வாங்க உள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரபா நகரில் காசா மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் - அதாவது 14 லட்சம் பேர் தற்போது வசிக்கின்றனர்.
எனவே அங்கு படை எடுத்தால் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படும் என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. காசா போரில் இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33,360 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.