ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னை - திருச்சி இடையே தனது புதிய தினசரி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை - திருச்சி இடையே விமான சேவைகள் குறைவாக இருந்ததால், பயணிகள் அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இண்டிகோ நிறுவனம் மட்டுமே இந்த வழித்தடத்தில் தினசரி சேவைகளை வழங்கி வந்ததால், கூடுதல் விமான சேவைகள் தேவை என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிலவி வந்தது. இதனை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னை - திருச்சி இடையே தனது புதிய தினசரி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த விமானம் இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.15 மணிக்கு சென்னையை சென்றடையும். மேலும், இந்த விமானத்தில் பயணிகளின் வசதிக்காக பிசினஸ் கிளாஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் தொடக்கத்தால், பயணிகள் அதிக வசதியுடன் குறைவான செலவில் பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.