இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டுக்காக, மின்விநியோக ஒப்பந்தத்தை லின்க்சன் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டபாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மேம்பாட்டு பணிக்காக மின்விநியோக ஒப்பந்தம் லின்க்சன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், மின்தடம் முதல் மெட்ரோ ரயில் வரை நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும். இத்திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடையும்போது, மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 15 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.