அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தொலைவு கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சுகாதார நடைபயிற்சி’ மேற்கொள்ளப்படும். கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.68 கோடியில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ரூ.298.95 கோடியில் அரசு மருத்துவமனைகளுக்கு சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட உயிர்காக்கும் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். தாய்-சேய் நல சேவை திட்டங்கள் ரூ.43.41 கோடியில் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.