கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோர் சார்பில், குறுந்தொழில்களுக்கான பிரத்தியேக தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கீரநத்தம் பகுதியில் இந்த தொழிற்பேட்டை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 30000 க்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும், அவை நகர் பகுதிகளில் உள்ள வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. எனவே, குறுந்தொழில்களுக்கான பிரத்தியேக தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 36 தொழில் முனைவோர் உறுப்பினர்கள் இணைந்து, 2.19 ஏக்கரில் ‘காட்மா இண்டஸ்ட்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்’ என்ற பெயரில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 12 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.