புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பை சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். அதில் தமிழகத்தில் 1.4.2003 மற்றும் அதற்குப் பின்பு அரசுப் பணியில் சேருவோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக செலுத்துகிறது.
கடந்த 31.3.2022 நிலவரப்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.61,251.16 கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.