தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைவாக உள்ளதால் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது.
திருச்சியில் மணச்சநல்லூர், அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா பகுதிகளிலிருந்து நெல் கொண்டு வரப்படுகின்றது. இவை தவிர கர்நாடகாவில் இருந்தும் இந்த ஆலைகள் நெல்லை பெற்று வருகின்றன. தற்போது வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் டெல்டா பகுதிகளில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ளது. இதனால் திருச்சி மட்டுமல்லாது தமிழக முழுவதும் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. மேலும் திருச்சி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரையிலான பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகுபடி மேற்கொள்ளாத காரணத்தினால் மேலும் நெல் வரத்து சரியும் என கூறப்படுகிறது.இதன் காரணமாக அரிசியின் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு உள்ளது