சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க ஏ.சி.டி.எம். எனப்படும் 'விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு' எனும் புதிய மென்பொருள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறையும். அதோடு எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டு செலவும் குறையும்.
சென்னை விமான நிலையத்தில் தற்போது ஒரு மணி நேரத்துக்கு 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுவதால் இனி ஒரு மணி நேரத்துக்கு 45 விமான சேவைகளாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.