மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தங்கள் நாடு வழியாக அகதிகள் கடத்தப்படுவதை தடுக்கும் சட்டத்தை திரும்ப பெற்றது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ அரசு நடைபெறுகிறது. அந்நாட்டு அரசு தங்கள் நாடு வழியாக அகதிகள் கடத்தப்படுவதை தடை செய்யும் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் நைஜர் வழியாக செல்கின்றன. இது குறித்து ராணுவ ஆட்சியாளர் சியானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டில் அகதிகள் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது. அது இப்போது திரும்ப பெறப்படுகிறது. அந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் இப்போது விடுவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் ரத்தாகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் நைஜர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு ஐநா, ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா யூனியன் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனுக்கும் நைஜர்க்கும் இடையிலான தூதரக உறவு பாதித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு நைஜர் வழியாக அகதிகள் கடத்தப்படுவதை தடுக்கும் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது.