அண்மையில், யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் இதற்கான அம்சங்களை தயார் செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது, ரூபே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி யுபிஐ பண பரிவர்த்தனை செய்ய முடியும். இந்நிலையில், 2000 ரூபாய் வரையிலான ரூபே பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்று நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என் பி சி ஐ) தெரிவித்துள்ளது.
அக்டோபர் 4ம் தேதி, இது குறித்த சுற்றறிக்கை ஒன்றை என் பி சி ஐ
வெளியிட்டுள்ளது. அதில், “முதல் முறையாக கிரெடிட் கார்டுகளை யுபிஐ தளத்தில் பயன்படுத்தும் பொழுது, யுபிஐ பின் நம்பர் உள்ளிட்ட பல தகவல்களை அளிக்க வேண்டியது இருக்கும். வாடிக்கையாளர்களின் ஒப்புதலுக்கு பின்னர் கிரெடிட் கார்டு பயன்பாடு அனைத்து வித பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றபடி மாற்றப்படும். யுபிஐ செயலிகளில் கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த வெளிப்படையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை வெளியிட்ட தேதியில் இருந்து இது அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த நான்கு வருடங்களாக ரூபே கிரெடிட் கார்டு பயன்பாடு இந்தியாவில் உள்ளது. ஆனால் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு அவை எளிதாக்கப்படவில்லை. தற்போது, இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளருக்கு கட்டண முறைகளில் பல்வேறு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பண பரிவர்த்தனை எளிதாகும்” என்று ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர் ராபி சங்கர் தெரிவித்திருந்தார். தற்போது, என் பி சி ஐ யின் அறிவிப்பினால், ரூபே கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.