ஆப்கானிஸ்தானை தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் சமீப காலமாக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் பேசுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தலிபான் பயங்கரவாத குழுவின் புகலிடங்களை பாகிஸ்தான் குறி வைத்து தாக்குதல் நடத்தும் என்றார். இதற்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும்படி பாகிஸ்தான் அறிக்கை விட்டுள்ளது. இது விவேகமற்றது. இது போன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை பாகிஸ்தான் தலைமை வெளியிடக்கூடாது. எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தாலிபான்.