வீடுகளில் பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டரில் பதிவான மின் பயன்பாட்டு அளவை கணக்கு எடுக்கின்றனர். சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு, பராமரிப்பது ஆகிய பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஒரு மீட்டரை பொருத்த ரூ.6 ஆயிரம் வரை செலவிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.