அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் மற்றும் காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், இரவு, பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.