எதிர்காலத்தில், அமுல் நிறுவனத்தின் பால் விலையை உயர்த்த திட்டம் இல்லை என்று குஜராத் கூட்டுறவு பால் வர்த்தக அமைப்பின் நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சொதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதர் டைரி நிறுவனம், டெல்லி என்சிஆர் பகுதியில் ஃபுல் கிரீம் பால் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பால் விலையை 2 ரூபாயும் உயர்த்தியது. இதனால், அமுல் நிறுவனத்தின் பால் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதில் அளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். மேலும், அக்டோபர் மாதத்தில், அமுல் கோல்ட் மற்றும் எருமை பால் விலைகள் லிட்டருக்கு 2ரூபாய் உயர்த்தப்பட்டன. குஜராத் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அங்கு மட்டும் விலை ஏற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
மதர் டைரி மற்றும் அமுல் நிறுவனங்கள் இந்திய பால் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்கள் ஆகும். ஏற்கனவே, உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினால், நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்படுவர் என்று கருதப்படுகிறது.