மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை ராகுல் காந்தி தொடங்குவார் என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று முதல் விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள். முன்னதாக உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், எம்.பி. பதவி பறிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.