சபரிமலையில் யாருக்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொச்சியிலிருந்து சபரிமலை சென்றுவர ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை நடத்தப்படும் என்று ஒரு தனியார் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின் காரில் பம்பைக்கும், அங்கிருந்து டோலியில் சன்னிதானத்திற்கும் சென்று விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சபரிமலை வந்தால் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான். யாருக்கும் எந்த முன்னுரிமையும் கிடையாது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் சர்வீஸ் எப்படி நடத்த முடியும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.